Sunday, July 16, 2006

ஞாபகமும் மறதியும்!

ஞாபகம் என்றாலே மறதியும் கைகோத்து வருகிறது - உடன் பிறந்த சகோதரன் போல. ஒன்றை ஞாபகப்படுத்தி வைத்தால்தான் அது மறந்துவிட்டதாகக் கூறமுடியும் - ஒரு விவரத்தை தக்க சமயத்தில் ஞாபகக்கோப்பிலிருந்து (மெமொரி ஃபோல்டர்-லிருந்து) வெளிக்கொணர முடியாத பட்சத்தில் அதை மறந்துவிட்டதாக கூறுகிறோம்.

சிலருக்கு புள்ளிவிவரங்களோடு வாதிடும் திறமை - தனது ஞாபகக் கிடங்கிலிருத்து தோண்டியெடுத்து வீசும் இலாகவம் அவருக்கு இறைவன் அளித்த வரப்பிரசாதம் ஆகும். அதன் வேகத்தன்மை தான் ஞாபகத்திறன் (மெமொரி பவர்) என்று அறியப்படுகிறது. மனிதனுக்கு மனிதன் இது வேறுபடுகிறது.

ஒருமணி நேரத்திற்கு முன் வீட்டில் ஓரிடத்தில் வைத்த சாவிக்கொத்தை ஒருநாள் முழுதும் தேடியிருக்கிறேன். ஆனால் 30 வருடங்களுக்கு முன் கேட்டு ரசித்த 'பாவாடைத் தாவணியில் பார்த்த உருவமா" பாடலை
'எங்கோ என் காலமெல்லாம் கரைந்து விட்டாலும் ஓர்
இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
மங்கையுன்னை தொட்டவுடன் மறைந்து விட்டாலும் நான்
மறுபடியும் பிறந்துவந்து மாலை சூடுவேன்' என ஈற்றடி வரை ஞாபகத்தில் பதிந்து வைத்திருக்கிற திறன் என்னுள்ளே பல ஆச்சர்ய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கும் அறிவியல் விற்பன்னர்கள், மூளையின் பதிவு மண்டலங்கள் பல அடுக்குகளாகப் (லேயர்ஸ்) பிரிக்கப்பட்டு, விபரங்களை பதிவு செய்து கொண்டிருப்பதாகவும், அடிக்கடி வெளிக்கொணரும் விவரங்கள் தூசு தட்டி மெருகேற்றப்பட்டு - அடிக்கடி உபயோகப்படுத்தும் விபரம் - என்ற முன்னுரிமை பெறுவதாகவும், அதற்குரிய அடுக்கில் அது சேமிக்கப்படுவதாகவும் அந்த விவரங்கள் நினைத்த மாத்திரத்திலேயே துள்ளி விழுவதாகவும் விளக்கம் கூறுகின்றார்கள்.

எது எப்படியோ, இப்பொழுதெல்லாம் மொபைல் போன் வைத்த இடம் தெரியாவிட்டால், மனிவியையோ, நண்பனையோ 'மிஸ்ட் கால்" கொடுக்கச்சொல்லி அதன் மணியோசை காதில் தேன் பாய்ச்ச ஓடி சென்று எடுக்கும்போதெல்லாம் - அட இதில் மட்டுமாவது தேடுதல் குறைந்ததே என்ற நிம்மதி . அப்பொழுதெல்லம் மற்ற ஜடப்பொருட்களுக்கெல்லாம் இப்படி ஒரு மணிகட்டினால் என்ன (சாவிக்கொத்து, டிவி / டிவிடி ரிமோட்கள், அடுப்பங்கரையில் சட்டி இடுக்கி, கேஸ் சிலிண்டர் ஸ்பேனர் போன்றவைக்கு) - அததற்கு ஒரு விசையை அழுத்தினால் 'நான் இங்கிருக்கிறேன்' என குரல் கொடுக்காதோ? என்ற நப்பாசை மனதில் இளையோடுகிறது.

இருந்தாலும் . . . .
வாழ்க்கையே ஒரு தேடல் தானே -
மறதி இல்லாவிட்டால் தேடல் இல்லை
தேடல் இல்லா வாழ்வில் சுவை இருக்குமா ? பதில் சொல்லுங்க !

2 Comments:

At 9:28 PM, Blogger Osai Chella said...

That is why one sivanadiyar, appar endru ninaikkiren... told the word " Karuthaa Maravaa Neri Kaana " ... you can forget one you what you have already remembered.... and you can remember something again... only after a gap of forgetting!paradox!

 
At 11:14 PM, Blogger அபு மர்வான் said...

நன்றி செல்லா.

 

Post a Comment

<< Home